Saturday, August 8, 2009

இவள் விடமாட்டாள் என்று தெரிந்து விட்டது

என்னிடம் ஜோதிடம் கேட்க வந்த தாயாரம்மா தன் வேலை முடிந்ததும் , சரி சாமி உன் வேலைய நீ பாரு நா போய் வரேன் என்று புறப்பட்டு போயிருக்க கூடாதா ? செத்த வெத்திலை போட்டுக்கிட்டு புறப்படறேன் என்றாளே வெற்றிலை போட்டுக்கொண்ட கையோடு ஒழிந்திருக்க கூடாதா ? அவள் ஏன் அந்த கேள்வியை கேட்க வேண்டும். நான் ஏன் என் கையறு நிலையை கூற வேண்டும். இந்த 42 ஆவது வயதில் இன்னொரு பெண் ஏன் என் வாழ்வில் நுழைந்து என் வாழ்வை வாணலிக்கு பயந்து அடுப்பிற்கு பாய்ந்த கதையாய் மாறவேண்டும். எல்லாம் விதி.

காதல் காதல் காதல் காதல் போயின் சாதல் என்ற பாரதி வரிகளை மெய்ப்பித்தல் என் நோக்கம் இல்லை என்றாலும் நான் பிறந்த நடுத்தர வகுப்பு குடும்பத்து ஹிப்பாக்ரசிகளை சகிக்க முடியாது பார்க்க சுமாரான ஒரு ஏழை பெண்ணை காதலித்ததோடு மணந்தும் கொண்டும் 24 மணி நேரத்தில் பிரிக்கப்பட்ட அதிர்ச்சி என்னில் ஏன் ஏன் என்ற கேள்விகளை எழுப்பி ஜோதிடத்தின் பால் செலுத்தியது. தெலுங்கு சினிமா மாதிரி 20 வ. முன்பான அந்த திருப்பமே என் வழ்வின் அனேக திருப்பங்களுக்கு காரணமானது.

ஊர் சேர்ந்து பிரித்த காதலியை மீட்க பண்ணாத தகிடு தத்தங்கள் இல்லை. என்னதான் சொல்லி அவள் மனதை கலைத்தார்களோ ? என்னதான் சொல்லி அவள் பெற்றோரை பயமுறுத்தினார்களோ தெரியாது. வீம்பு காரணமாய் இரண்டு வருடங்களிலேயே மற்றொரு பெண்ணை இவளும் வேறு ஜாதி. ஏழையும் கூட என் உத்தேசம் என்னவென்றால் வீட்டினர் சொல்லும் பெண்ணை மணந்து நான் என் சொந்த திறமையில் வெளிச்சத்துக்கு வந்தாலும் என்ன சொல்வார்கள் ? " ஹ்ம்..அவ எவ ..... பின்னாலயோ ஓடினயே..அப்படியே விட்டிருந்தா இந்த நிலைக்கு வந்திருக்க முடியுமா " என்று தானே அலட்டுவார்கள். அந்த வாய்ப்பை அவர்களுக்கு தரக்கூடாது. மேலும் நான் காதலித்து பிரிக்கப்பட்ட பெண்ணே என்னை பார்த்து அடப்பாவி ! என்னை விட்டுட்டு ஊட்ல சொன்னவ பின்னாடி போறியே நீ நல்லாருப்பியா என்று தானே வயிறெரிவாள். அந்த வாய்ப்பை அவளுக்கு தரக்கூடாது

இப்படியெல்லாம் கணக்கு போட்டுதான் காதல் கடிமணம் புரிந்தேன். இதோ 18 வருடங்கள் ஓடிவிட்டன. தலை முடி கொட்டி, தாடி மீசை வெளுத்து ,லேசாக தொப்பை போட்டு ஒரு உதவாக்கரை தமிழ் தினசரிக்கு குத்து கொலை செய்திகள் கொடுத்த படி, சூரியன் மற்றெந்த கிரகத்தையும் சுற்றுவதில்லை, எங்கிருந்து எங்கும் பெயர்வதில்லை என்ற அற்வியல் அறிவு இருந்தும் கிரிக்கெட் காமெண்ட்ரி மாதிரி கிரகங்கள் குறித்த காமெண்ட்ரியை கொடுத்தபடி வயிறு வளர்த்துக்கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் இந்த தாயாரம்மா கேட்ட கேள்வியால் என் வாழ்வில் அதிரடி திருப்பம்.


அவள் தன் சுருக்குப்பையை திறந்ததும் நான் வேலை பார்க்கும் தினசரிக்கு செய்திகளை எழுத ஆரம்பித்தேன். அந்த பத்திரிக்கையின் தினசரி நியூஸ் டெட் லைன் மாலை 5 மணி என்பதால் மாலை 5க்கு பிறகு கிடைக்கும் செய்திகளை காலை நேரத்தில் எழுதி உச்சி வெயிலில் பஸ் மூலம் அனுப்பி வைப்பது வழக்கம்.

ஒரு பாட்டம் வெற்றிலை போட்டு குதப்பி வெளியே போய் துப்பி விட்டு வந்தவள் "சாமி நான் கேக்கறனேனு தப்பா நினைக்க கூடாது சாமி ! உங்கப்பா பெரிய ஆஃபீசரு பாவம் வாயை கட்டி வயித்த கட்டி உங்களை எல்லாம் வளர்த்து ஆளாக்கினாரு. பாவம் பத்து பைசா லஞ்சம் வாங்காம மானஸ்தனா வாழ்ந்தாரு. அவர் பெத்த புள்ளைங்க 4 பேர் இருக்கும்போதே அவர் கட்டின வீட்டை வித்துட்டிங்க ... உங்க ரெண்டு அண்ணன் மாரும் 50 வயசுக்குள்ளயே செத்து போயிட்டாங்க ..உங்க தம்பி பாவம் ரத்தம் ரத்தமா கக்கிகிட்டிருக்காராம். உன் வீட்ல பார்த்தா உன் பெண்டாட்டி கண்ணுல மட்டும் உயிரை வச்சுக்கிட்டிருக்கு.. உன் பொண்ணு பாவம் படிப்பை கூட நிப்பாட்டிட்டு எங்கயோ போட்டோ ஸ்டுடியோல வேலை செய்யுதாம். அந்த ஸ்டுடியோ காரனையே கல்யாணம் கூட கட்டிக்க போவுதாம். உன்னை பார்த்தா நீ ஒன்னும் குடிச்சி கூத்தடிக்கற மாதிரியும் இல்லே. ஜோஸ்யம் பார்க்க வந்தவங்க இருபது வச்சாலே "அட என்னத்த சொல்லிட்டேன் பத்து போதும் .. இந்த பத்துக்கு குழந்தைங்களுக்கு எதுனா வாங்கிட்டு போங்கனு சொல்லிர்ர. அது ஏன் சாமி நல்லவங்களுக்கே கடவுள் இந்த மாதிரி சோதனைய கொடுக்கறாரு. " என்று பத்தி பத்தியாக பேசினாள்.

"எனக்கு ரேங்கி விட்டது . இத பாரு..இந்த மாதிரி தர்ம சந்தேகத்துக்கெல்லாம் பதில் சொல்ல நான் ஒன்னும் சங்கராச்சாரி கிடையாது. ஆள விடு " என்றேன். சற்றே முகம் சுருங்கி போனாலும் என்னை விடுவதாயில்லை அவள். " இதுக்கெல்லாம் கோச்சுக்கிட்டா எப்படி சாமி.. நீங்க பெரிய பெரிய புஸ்தவம்லாம் படிக்கிறிங்க. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுவிங்கன்னு தான் கேட்டேன்" என்றால் கெஞ்சலாய்.

பாவம் உருவம்,வயதுதான் வளர்ந்திருக்கிறதே தவிர அப்பாவி. செய்வது பழைய பாட்டில் வியாபாரம் தான் என்றாலும் லோட் லோடாய்தான் தள்ளிவிடுவாள். பணவிஷயத்தில் கெட்டி. என்ன ஒரு சிக்கல் என்றால் கணவன் கு(ட்)டிகாரன். இவள் என்னமோ அம்மன் சினிமாவில் அம்மன் வேடம் கொடுக்கலாம் போலத்தான் இருக்கிறாள். அந்த மனிதனுக்கு என்ன அலுப்போ ! மாப்பிள்ளை சோப்ளாங்கி வருடா வருடம் கடன் கேட்டு வந்து தலை சொறிவான். பிள்ளை சூதாடி. சம்பாதனை என்னவோ தலைக்கு மேல் தான் இருக்கிறது. லகர கணக்கில் ஒரு வட்டி இரண்டு வட்டிக்கும் திருப்பி வருவதாய் கேள்வி.

சரி .. இவள் விடமாட்டாள் என்று தெரிந்து விட்டது. நான் டென்ஷனாய் என் பின்னே திரும்பி பார்த்தேன் பீடிக்கட்டு, தீப்பெட்டி இருக்கிறதா என்று அவளுக்கு தெரியும் நான் எரிச்சலடைந்தால் உடனே வெளியே போய் ஒரு பீடி குடித்து விட்டுதான் வருவேன் என்று. இன்று .."சாமி த பாரு ! எனக்காக நீ ஒன்னும் வெளிய போகவேனா அடிச்சு விடு" என்றாள் .

நான் பீடி ஒன்றை எடுத்து பற்ற வைத்துக்கொண்டு புகை ஆழ உறிஞ்சி வெளியேற்றினேன், அவள் ஆவலுடன் என் முகத்தையே பார்ப்பது ஒரு வித திருப்தியை தந்தது. பேச ஆரம்பித்தென் " தபாரு ! லைஃப் வந்து மெகா சீரியல் மாதிரி இதுல காரண காரியம்லாம் நம்ம திருப்திக்கு நாம சொல்லிக்கலாம் அவ்ளதான். இருந்தாலும் நீ இவ்ள தூரம் கேட்டதால சொல்றேன்.

3 comments:

  1. மாசிலா அவர்களே!
    தங்கள் மறுமொழிக்கும் பாராட்டுக்கும் நன்றி.
    100 சதவீதம் சொந்த அனுபவம்னு சொல்ல முடியாது. ஆட்டை தூக்கி மாட்ல போட்டு, மாட்டை தூக்கி ஆட்ல போட்டு எழுதறதுதான்.. பதிவு நிச்சயமா தொடரும்

    ReplyDelete
  2. மன்னிக்கவும் தோழரே. ஒரே பின்னுட்டம் இரண்டு முறை தோன்றிய காரணத்தால், இரண்டாவதை மட்டும் அழிக்க முயற்சித்ததில் முழுதும் அழிந்துவிட்டது. தவறுதலுக்கு வருந்துகிறேன்.

    முன் சொன்னதுபோலவே, உங்களது ஆக்கங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    பின் குறிப்பு : படிப்பதற்கு இலகுவாக இருக்க தயவு செய்து தகுந்த இடைவெளி விட்டும் எழுத்துருக்களின் நிறத்தை சிறிது வெண்மையும் ஆக்கிவிடவும்.

    நன்றி.

    ReplyDelete
  3. நன்றி. உடனே எழுத்துக்களின் நிறத்தை மாற்றுகிறேன். அது என்னவென்றே தெரியவில்லை அனைத்து மறுமொழிகளும் இரண்டு முறை தோன்றுகின்றன. ஆடி மாத எஃபெக்டா தெரியவில்லை. (ஒன்னு வாங்கினா ஒன்னு இலவசம் போல)

    ReplyDelete